வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நிமிரும் இலங்கை – புதிய ஆண்டில் அதிரடி ஆரம்பம்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெறப்பட்ட 573.0 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது 31.1 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதிலும் மொத்தம் 8.076 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணவனுப்பல்களாகக் கிடைத்துள்ளன. இது இலங்கையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
2026ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இவ்வாறான ஒரு பலமான முன்னேற்றம் காணப்படுவது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை மேலும் உறுதிப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டு இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்குகள் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் இந்தப் பங்களிப்பு நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய தூணாக அமைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.




