சொத்து விபரங்களை சமர்ப்பிக்க புதிய டிஜிட்டல் முறைமை!

இலங்கையில் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான புதிய மத்திய மின்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் முறைமையை அறிமுகப்படுத்த இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகள் நிலைய கேட்போர் கூடத்தில் இந்த டிஜிட்டல் முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் அச்சிடப்பட்ட படிவங்கள் ஊடாக கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட முறைமைக்கு பதிலாக, இனிவரும் காலங்களில் இணைய வழியில் தகவல்களைப் பதிவேற்ற முடியும்.
தவறான தகவல்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அசாதாரண சொத்துக் குவிப்புகளைக் கண்டறிவதற்கான விசேட சரிபார்ப்பு வசதிகள் இந்த முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சொத்து விபரங்களை வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய தொழில்நுட்பத் தேவையாக இது கருதப்படுகிறது.
இந்த மின்மயமாக்கப்பட்ட முறைமையின் ஊடாக இலங்கையின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் நவீனமயமாக்கல், சுயாதீனத்தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியவை மேலும் வலுப்பெறும் என இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.




