Sri Lanka News

வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள் – இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படக்கூடிய திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, வீட்டு உரிமையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

வெப்பநிலை அதிகரித்து வருவதால், பல குடியிருப்பாளர்கள் காற்றோட்டத்திற்காக இரவில் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்து உறங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகள் குற்றவாளிகளுக்குத் திருட்டுச் சம்பவங்களைச் செய்வதற்குச் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்று பொலிஸ் எச்சரித்துள்ளது.

தமது வசதிக்காக வீட்டின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள பொலிஸ், திருட்டு அபாயத்தைக் குறைப்பதற்காகப் பின்வரும் சில நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரியுள்ளது.

அதன்படி, காற்றோட்டத்திற்காகத் திறந்து வைக்கப்படும் ஜன்னல்களில் ஊடுருவ முடியாதவாறு பாதுகாப்பான உலோகக் கம்பிகளை (Grills) பொருத்துவதை உறுதி செய்யுமாறும், உறங்கச் செல்வதற்கு முன், வீட்டின் அனைத்துக் கதவுகளும், வெளிவாயில்களும் (Gates) சரியாகப் பூட்டப்பட்டிருப்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊடுருபவர்களை முன்கூட்டியே அடையாளம் காணும் வகையில், போதுமான அளவு வெளிப்புற மின்விளக்குகளைப் (Security Lights) பராமரிக்குமாறும், இயலுமானவரை நவீன பாதுகாப்பு எச்சரிக்கை மணிகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களைப் பயன்படுத்துமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது நடமாடும் அந்நிய நபர்கள் குறித்து எவ்விதத் தாமதமுமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button