இன்றைய வானிலை

2025.10.21
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.
மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் வட மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் .
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
நாட்டின் கிழக்கு கடல் பிராந்தியத்தில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடைவதனால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு , காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.



