Sri Lanka News

இலங்கையில் மின் கட்டணம் உயருமா? நாளை வரவுள்ள அறிவிப்பு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (30) அறிவிக்கவுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக அதிகளவில் டீசலைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளமை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது எதிர்பார்க்கப்படும் வருமானத்தை விட, செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேலதிகமாக 15.8 பில்லியன் ரூபா தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால், “மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது தற்போதைய நிலையிலேயே பேணுவதா என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.

எனினும், மின்சார சபையின் கடந்தகாலக் கடன்கள் எதுவும் புதிய கட்டணக் கணிப்பீட்டில் சேர்க்கப்பட மாட்டாது,” என உறுதியளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button