கடும் மழையால் ஒருவர் உயிரிழப்பு; பலர் பாதிப்பு! அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்ப தீர்மானம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற்கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்பிவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 144 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய குருநாகல் மாவட்டத்தில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேரும், காலி மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு உணவுகளை வழங்குவதற்கு பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை பிரிவு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனிடையே நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாகப் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.




