கொத்தலஹிம்புட்டுவை கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் இன்று (31) அதிகாலை பணியாற்றிய சுங்க அதிகாரிகளால், கொத்தலஹிம்புட்டு (Kothala Himbutu) தொகையை சட்டவிரோதமாக சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தேயிலை வர்த்தக முத்திரையிடப்பட்ட பொதிகளுக்குள், இந்த சீனப் பிரஜை 21 கிலோ கிராம் கொத்தலஹிம்புட்டுவை பொதி செய்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 46 வயதுடைய குறித்த சந்தேக நபர் இலங்கைக்குச் சுற்றுலா வந்த ஒரு சீனப் பிரஜை என தெரியவந்துள்ளது.
அவர் இன்று அதிகாலை 01.40 மணியளவில் சீனாவின் குன்மிங் (Kunming) நகருக்குப் புறப்பட்ட சைனா ஈஸ்டர்ன் (China Eastern) விமானச் சேவையின் MU-714 என்ற விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி, கொத்தலஹிம்புட்டு என்பது இலங்கையிலிருந்து வெளியே கொண்டு செல்ல முடியாத பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




