News

இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட 125 சீனர்கள்

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று  அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, அனுராதபுரம் பகுதியில் கணினித் துறையில் தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் 17 ஆம் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவின் பேரில், அவர்கள் நாடுகடத்தப்படும் வரை வெலிசறை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்து இலங்கைக்கான சீனத் தூதரகம் ஊடாக அந்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, இவர்களை அழைத்துச் செல்வதற்காக ‘சீனா ஈஸ்டர்ன்’  விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த விசேட விமானத்தில் சீனாவிலிருந்து வருகை தந்த வைத்தியர்கள் மற்றும் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் குழுவொன்றும் வருகை தந்திருந்தது.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் 125 சீனப் பிரஜைகள், சீன அதிகாரிகள் மற்றும் இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தைச் சேர்ந்த 06 அதிகாரிகள் சகிதம் இந்த விமானம் சீனாவின் வூஹான்  நகரை நோக்கிப் புறப்பட்டது.
#SocialTv #NewsUpdate #srilanka #Chinese

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button