நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது! அரசாங்கம் அறிவிப்பு

நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான அளவில் மட்டுமே பணம் அச்சிடுகிறோம். இது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகிறது.
கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது, வருமான-செலவு இடைவெளியை 33%க்கும் அதிகமாகக் குறைத்துள்ளோம். கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அரச வருவாய் ரூ. 1.8 டிரில்லியனாக இருந்தது.
இந்த ஆண்டு, இது ரூ. 2.3 டிரில்லியனாக உயர்ந்து, வருவாய் 24.7% அதிகரித்துள்ளது. செலவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் நிலையாக உள்ளது. எந்தச் சந்தேகமும் வேண்டாம் என தெரிவித்தார்.