சர்வதேச சந்தையில் தங்க விலை கிடுகிடு உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 01) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதேவேளை, வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை தரவுகளின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,689.17 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளதே இந்த அதிகரிப்புக்குக் காரணமாகும்.
அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை இன்று வீழ்ச்சியடைந்து 74.11 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு காரணமாக, உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், உலகளாவிய இந்த மாற்றம் உள்ளூர் நகை விற்பனையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க டொலரின் வலுவூட்டல், சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் குறிப்பாக மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தி மற்றும் உலோகச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




