சம்பா அரிசி தட்டுப்பாடு: மாற்று அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டுச் சந்தையில் நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, விவசாயத் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் அண்மைய தரவுகள், 2025/26 பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி நாட்டின் தேவைக்கு போதுமானதாக இல்லையெனக் காட்டுகின்றன.
இதனால், எதிர்வரும் மே மாதம் முதல் இந்த அரிசி வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை சமாளிக்கும் வகையில், உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்று அரிசி இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘HS Code 1006.30.29’ கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பொன்னி சம்பா, கீரிஃபால் பொன்னி மற்றும் ஜி.ஆர்.11 போன்ற அரிசி வகைகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒரு இறக்குமதியாளர் அதிகபட்சமாக 1,040 மெட்ரிக் தொன் அளவிலான அரிசியை ஏப்ரல் 1 முதல் 30 ஆம் திகதி வரை இறக்குமதி செய்ய முடியும்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி மே 31 ஆம் திகதிக்குள் இலங்கைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அரிசி வகைகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் தனியான இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த அவசர யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




