News

சேவைக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம்: எரிசக்தி அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எச். பி. நிரோஷனின் பதவிக் காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து, கடந்த 15ஆம் திகதி எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவால் அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவால் அனுப்பப்பட்ட கடிதத்தில், மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி வகித்த அவரது பதவிக் காலம் அடுத்த வருடம் ஜூன் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக எச். பி. நிரோஷனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அனுமதி வழங்கியுள்ளதாகவும் செயலாளர் தனது கடிதத்தில் பணிப்பாளர் நாயகம் நிரோஷனுக்கு அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்தக் கடிதம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கடந்த 22ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட நியமனத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த நியமனத்திற்கு தாம் எந்த வகையிலும் அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த நியமனத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு அமைச்சர் எழுத்து மூலம் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

மேலும், அத்தகைய நீட்டிப்பிற்கு அங்கீகாரம் கோருவதும் ஒரு தவறான முன்வைப்பாகும் என்றும் அமைச்சர் தனது கடிதத்தில் அமைச்சின் செயலாளருக்குத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button