“தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளனர். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
முதல்வர் விஜய் தனது அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும்,” என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், “அமித் ஷா என்னை டெல்லிக்கு அழைத்து, டெல்லியில் பொறுப்பேற்கச் சொன்னார். ஆனால், நான் தமிழ்நாட்டில் இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறிவிட்டேன். நான் எப்போதும் ஒரு கொள்கையுடன்தான் அரசியல் செய்கிறேன்.
எங்களது அரசியல் என்பது டெல்லியிலோ அல்லது போயஸ் கார்டன், பனையூர், கோபாலபுரத்திலோ அமர்ந்து முடிவெடுக்கும் அரசியலாக இருக்காது. பின்வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர எனக்கு விருப்பமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது லட்சியம்.
தமிழ்நாட்டில் தற்போது புதிய முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. பல எம்எல்ஏக்கள் முதல்முறையாகச் சட்டப்பேரவைக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு ஆண்டு காலம் அவகாசம் கொடுப்போம். தவறுகள் நடக்கும்போது நிச்சயம் தட்டிக்கேட்போம்,” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

