நாடு முழுவதும் 17,000 மின் தடை சம்பவங்கள்: சீர்செய்யும் பணிகள் தீவிரம்

மின்சார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும், நாடு முழுவதும் சுமார் 17,000 மின்சாரத் தடைகள் பதிவாகியுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றை விரைவாகச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் அதிகாரிகளுடன் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இலங்கை மின்சார சபையை கலைத்த பின்னர், ஊழியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை மற்றும் அவர்கள் இணைக்கப்படவுள்ள நிறுவனங்கள் குறித்து முறையான அறிவித்தல் விடுக்கப்படாமை ஆகிய காரணங்களை முன்வைத்து, கடந்த 9 ஆம் திகதி மாலை முதல் 24 தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறப்பணிப்பை ஆரம்பித்தன.
பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டாலும், மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர ஊழியர்கள் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.




