திடீரென இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டடம்; மாணவன் பலி – 93 பேர் பலத்த காயம்; 65 பேர் மாயம் – மீட்புப்பணி தீவிரம்!

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் 93 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் உள்ள பாடசாலையில் இந்த பயங்கர விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த பாடசாலையில் திடீரென கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. தகவலையடுத்து
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் நீண்டநேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தததுடன் மேலும் 93 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் இடிபாடுகளில் பல உடல்களைக் கண்டதாகவும், பலி் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் மாணவர்கள் 65 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் 7 முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர்.
இது தொடர்பில் மீட்பு படை அதிகாரி தெரிவிக்கையில்,
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கிறோம். அதே நேரத்தில் அவர்களை மீட்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இடிபாடுகளுக்கு அடியில் சிதறிக் கிடந்த பல உடல்களை கண்டோம். ஆனால் இன்னும் உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
திடீரென பாடசாலைக் கட்டடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.




