தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயது குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ளது.
இன்று 11ஆம் திகதி அதிகாலை, தனியார் பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த நபரின் ஒன்றரை வயது குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி, பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றில் கலந்துகொண்டுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமனயாய பகுதியில் மோட்டார் சைக்கிள் திடீரென திரும்ப முற்பட்டபோது, பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி பகமூண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

