எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை

எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி குறிப்பிட்டார். இது குறித்து இன்று (26) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விநியோக நடவடிக்கைகளில் சிரமங்கள் இருந்தபோதிலும், கடந்த நாட்களில் எந்தவொரு தடையுமின்றி விநியோகப் பணிகளை முன்னெடுத்தோம். இவ்வாறான நிலையில்தான் அண்மையில் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரிக்கப்பட்டது.
இந்த மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை 101 ரூபாயால் அதிகரித்துள்ளது. இதனால் எமது விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப விலைச் சீராக்கல் தற்போது இடம்பெற்றுள்ளது. இருப்பினும், நகரங்களுக்கு இடையிலான விநியோக நடவடிக்கைகளே எமக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.
எனவே, நகரங்களுக்கு இடையிலான விநியோகக் கட்டணத்தை 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்க செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் எங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளாது என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.




