நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் தேவைகளை நிறைவேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வதாக உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கை

கே எ. ஹமீட்
அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இளைஞர் விவகார , விளையாட்டு துறை அமைச்சர் திரு.சுனில் குமார கமகேவை அமைச்சரின் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கண்டியில் இருந்து பாணம வரையில் அமைந்துள்ள சிங்கள மொழிப் பிரதேசங்களுக்கு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரியும் (DYSO) , அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழி பிரதேசங்களுக்கான மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரியும் (DYSO) கடமை புரிந்து வந்தனர்.
எனவே அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி பிரதேசங்களுக்கான மாவட்ட இளைஞர் சேவைகளை (DYSO) நியமிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நிந்தவூரில் இயங்கி வரும் மதீனா விளையாட்டு கழகம் 2010ம் ஆண்டு முதல் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல விருதுகளைப் பெற்றதுள்ளது. இவ் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் இலங்கை கடற்படை கபடி அணியையும், எயார்லங்கா இராணுவ கபடி அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இக் கழக கபடி அணி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது .
எனவே நிந்தவூரில் கபடி உள்ளக விளையாட்டரங்கு ஒன்று அமைத்தல், 250 கபடி பாய்கள், 50 கபடி முழங்கால் காவலர்கள் ,50 செட் கபடி ஹெல்மெட்கள், 50 சோடி உட்புற காலணிகள் போன்ற தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.
எனவே விளையாட்டு துறை அமைச்சின் நிதியினால் மதீனா விளையாட்டுக் கழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த இளைஞர் விவகார, விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் அம்பாறை மாவட்ட தமிழ் மொழி பிரதேசங்களுக்கான மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகளை(DYSO) நியமிக்கவும், நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகத்தின் தேவைகள் குறித்தும் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்க உள்ளதாகவும் குறித்த அறிக்கை கிடைத்தவுடன் மேற்குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ்.உதுமாலெப்பையிடம் தெரிவித்தார்




