போர்ச் சூழல் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்.? ஜனாதிபதி அநுர விளக்கம்

சர்வதேச போர்ச் சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் பொருளாதார நிலைமை தொடர்பான முன்னறிவிப்புகளை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.
அதில், நிதிச் சந்தையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மூன்று நிலைகளாக அவர்கள் ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, தற்போதைய நிலை, அதைவிட தீவிரமான நடுத்தர நிலை மற்றும் எதிர்பாராத அளவில் ஏற்படக்கூடிய மிக மோசமான நிலை என மூன்று கட்டங்களில் நிதிச் சந்தையின் மாற்றங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் தேவையான முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டின் பொருளாதாரம், உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் நிதி அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பும் முக்கிய விடயமாக கருதப்படுவதாக கூறிய அவர், நிலைமை மோசமடைந்தால் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டங்களும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நாட்டை விட்டு வெளியேற முடியாத சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வார கால இலவச விசா வழங்குவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளும் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த சில சரக்குக் கப்பல்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஅவற்றிற்கு தேவையான சலுகைகள் வழங்குவது மற்றும் கொள்கலன்களை வைப்பதற்கான இடங்களை ஏற்பாடு செய்வது தொடர்பிலும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேயிலை ஏற்றுமதி உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




