இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் – நிதியுதவியை உயர்த்தி அதிரடி முடிவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், 2009 ஆம் ஆண்டு முதல் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 277,167 குடும்பங்களைச் சேர்ந்த 919,450 நபர்கள் அவர்களது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி 1 ஆம் திகதி நிலவரப்படி, குறித்த மாகாணங்களில் இன்னும் சொந்தமாக வீடுகள் இல்லாத இடம்பெயர்ந்த குடும்பங்கள் 13,069 அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் அமைச்சரவையினால் இருவர் அல்லது அதற்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு (340 சதுர அடி வீடு) 9 இலட்சம் ரூபாயும் இருவருக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு (550 சதுர அடி வீடு) 15 இலட்சம் ரூபாயும் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டது.
இருப்பினும், 2026 ஜனவரி 2 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற முற்போக்கு மீளாய்வுக் கூட்டத்தின் போது, பயனாளிகள் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருத்தல், கட்டிடப் பொருட்கள் மற்றும் மனித உழைப்புக்கான செலவுகள் அதிகரித்துள்ளமை போன்ற காரணங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனைக்கருத்திற் கொண்டு, தரமான வீடுகளை அமைப்பதை உறுதி செய்யும் நோக்கில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்திற் கொள்ளாது, 550 சதுர அடி கொண்ட ஒரு வீட்டிற்காக வழங்கப்படும் நிதியுதவியை 2026 ஆம் ஆண்டு முதல் 2 மில்லியன் ரூபாவாக (20 இலட்சம்) அதிகரிப்பது பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த நிதியுதவி அதிகரிப்புக்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




