Sri Lanka News

இலங்கைக்கு கடத்த முயன்ற முந்திரிப் பருப்பு பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் இருந்த குறித்த முந்திரிப் பருப்பின் பெறுமதி இந்திய ரூபாயில் சுமார் 15 லட்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைபர் படகு, இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மரைக்காயர்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக ‘கியூ’ (Q) பிரிவு காவல் ஆய்வாளர் ஜீவமணிக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

வாகனங்களில் இருந்து படகிற்கு முந்திரி மூட்டைகளை மாற்றிக்கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது இருவர் கடலில் குதித்துத் தப்பினர்.

மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட முந்திரி மூட்டைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் ‘கியூ’ பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால், தனுஷ்கோடி, மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை, முந்திரி, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்குத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button