Sri Lanka News

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் காட்டுகின்றது.

இதற்கு பிரதானமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வியின் அதிகரிப்பே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக லாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49% ஆல் அதிகரித்துள்ளதுடன், அது 178.29 மில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் 6.76% ஆல் வளர்ச்சியடைந்து 141 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதிகள் 12.95% ஆல் அதிகரித்து 55.12 மில்லியன் டொலர் வருமானமாகவும் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் 4.06% ஆல் குறைவடைந்துள்ளதுடன், அது 72.8 மில்லியன் டொலர்கள் எனக் கூறப்படுகிறது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டு காலப்பகுதியில், மொத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2024 இல் 4.76 பில்லியன் டொலர்களாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 5.42% வரை அதிகரித்துள்ளதுடன், அது 258.18 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும் என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button