சம்மாந்துறைக்கு மீண்டது மக்களின் உரிமை: இழந்த இ.போ.ச (CTB) டிப்போ உத்தியோகபூர்வமாக கையளிப்பு!


✍️மஜீட். ARM
சம்மாந்துறை தொகுதி மக்கள் இழந்திருந்த இலங்கை போக்குவரத்து சபையின் (CTB) பஸ் டிப்போ, இன்று (03.11.2025) சம்மாந்துறை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை மக்களின் நீண்டகால போக்குவரத்துத் தேவைக்கான போராட்டத்திற்கு இந்த நிகழ்வு ஒரு தீர்வாக அமைந்து.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாகவே இந்த டிப்போ மீட்கப்பட்டுள்ளது.
”கடந்த தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் கட்சியின் பிரச்சார மேடைகளில் முதன்மையாகப் பேசப்பட்ட முக்கிய பிரச்சனைகளில் இந்த சம்மாந்துறை CTB பஸ் டிப்போவும் ஒன்றாகும். மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து, இன்று அவர்களின் உரிமை மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது,” என்று நிகழ்வில் கலந்துகொண்டோர் குறிப்பிட்டனர்.
டிப்போ உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முதற்கட்ட நடவடிக்கையாக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பங்குபற்றலுடன் ஊர் பொதுமக்களும் சேர்ந்து, டிப்போவை எதிர்கால சேவைக்காகத் தயார்நிலைக்குக் கொண்டு வந்தனர். விரைவில் சம்மாந்துறையிலிருந்து அத்தியாவசிய பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிய பின்வரும் முக்கியஸ்தர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்தார்:
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சர், கௌரவ விமல் ரத்னாயக்க
அபிவிருத்தி, கிராமிய பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர், கௌரவ வசந்த பியதிஸ்ஸ
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய பிரதான முகாமையாளர் (CRM)
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதேச செயலாளர், தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை தொகுதி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், செயற்பாட்டாளர்கள், போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




