டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தரவு பாதுகாப்பு, தனியுரிமை, ஒழுக்கநெறிக்கு உறுதி தேவை – பிரதமர் ஹரினி

டிஜிட்டல் மனநலம் தொடர்பான சவால்களை தீர்க்க புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் தேவைப்படுவதாகவும் தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
eMHIC சர்வதேச டிஜிட்டல் மனநலம் கலந்துரையாடல், கடந்த 22ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நோக்கம், இலங்கையில் டிஜிட்டல் மனநலம் தொடர்பான சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை ஆராய்வதாகும்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் கூறுகையில்,
நவீன டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் வேளையில், தரவின் நம்பகத்தன்மை, தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை ஒழுக்கநெறிகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ஒரு தெளிவான கட்டமைப்பு உருவாக வேண்டும். என தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மனநல சேவைகள் வெகு விரைவில் நடைமுறைக்கு வரும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள், சமூக அடிப்படையிலான ஒருங்கிணைந்த செயற்திட்டங்கள், மற்றும் கல்வி முறை சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு, டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் மனநலத்தில் தகுந்த புரிதலை வழங்க எதிர்கால நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
eMHIC நிர்வாக இயக்குனர் பேராசிரியர் Anil Thapliyal, கனடா செனட் உறுப்பினர் Kathy Hay, அரச அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.