Sri Lanka News

கொழும்பின் நீர்வெட்டு நேரத்தைக் குறைக்க அவதானம்

கொழும்பின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு காலத்தைக் குறைப்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுக்கப்படும் நீர்வெட்டு நேரத்தை 8 அல்லது 12 மணித்தியாலங்கள் வரை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார குறிப்பிட்டார்.

வறட்சியான வானிலைக்கு மத்தியில் நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் வழங்கலைத் தற்காலிகமாக நிறுத்த நீர் வழங்கல் சபை தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், 24 மணித்தியாலங்கள் நீர் வழங்கல் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அந்த நேரத்தை 18 மணித்தியாலங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகச் சபை நேற்று அறிவித்திருந்தது.

தற்போது அந்த கால அளவை மேலும் குறைப்பது குறித்துச் சபையின் கவனம் திரும்பியுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நீர் வழங்கலில் மேலும் தடைகள் ஏற்பட்டால், பௌசர்கள் மூலம் நீரை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஏனைய மாவட்டங்களில் சபையின் கீழ் உள்ள நீர் பௌசர்களைக் கொழும்புக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார குறிப்பிட்டார்.

நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக இதுவரையில் சுமார் 20,000 நீர் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர் சந்தன பண்டார மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button