Home செய்திகள்ஃபுஜி மலைத்தொடர் ஏறச் சென்ற தந்தை, 7 வயது மகனை மலையில் தனியாக விட்டுச் சென்றார்!

ஃபுஜி மலைத்தொடர் ஏறச் சென்ற தந்தை, 7 வயது மகனை மலையில் தனியாக விட்டுச் சென்றார்!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

ஃபுஜி மலைத்தொடர் ஏறச் சென்ற தந்தை – சோர்வடைந்த 7 வயது மகனை மலையில் தனியாக விட்டுச் சென்றார்.

ஜப்பானின் மிக உயரமான மலைத்தொடரான மவுண்ட் ஃபுஜி மலையேற்றத்தின்போது, சோர்வடைந்ததாகக் கூறிய தனது 7 வயது மகனை மலையில் தனியாக விட்டுச் சென்ற தந்தையை உள்ளூர் பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை, ஃபுஜினோமியா பாதையின் ஆறாவது நிலையம் அருகே, கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள ஒரு பெஞ்சில் சிறுவன் தனியாக அமர்ந்திருந்ததை மலையில் பணிபுரியும் ஒருவர் கண்டுபிடித்தார்.

banner

சிறுவனை பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு அழைத்த அந்த ஊழியர், பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

பொலிஸார் சிறுவனை பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர். குடும்பத்துடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, தொடர்ந்து ஏற முடியாத அளவுக்கு தான் சோர்வாக இருப்பதாக சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, நகோயா நகரைச் சேர்ந்த அந்த தந்தை, மகனிடம் சில சிற்றுண்டிகளையும் குளிர்பானத்தையும் கொடுத்து, அங்கேயே காத்திருக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர், ஏற்கனவே முன்னதாகச் சென்றிருந்த தனது மூத்த மகனுடன் சேர்ந்து, சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் உச்சிப் பகுதி நோக்கிய பயணத்தை அவர் தொடர்ந்துள்ளார்.

சிறுவனை விட்ட இடத்திலிருந்து மீண்டும் அங்கு திரும்புவதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தந்தையை தொடர்புகொண்டபோது, அவர் சிறுவனை விட்டுச் சென்ற ஆறாவது நிலையத்திலிருந்து சுமார் 3 மணி நேர நடைபயண தூரத்தில் உள்ள எட்டாவது நிலையத்தை அடைந்திருந்தார்.
உடனடியாக திரும்பி வருமாறு பொலிஸார் அவருக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் தந்தையும் மகனும் மீண்டும் சந்தித்த நிலையில், செயலில் உள்ள எரிமலைப் பகுதியில் குழந்தையை தனியாக விட்டுச் சென்றதற்காக பொலிஸார் தந்தையை கடுமையாக எச்சரித்தனர்.

“மலையை ஒன்றாக ஏறுவதை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டாலும், ஒரு குழந்தையை தனியாக விட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மவுண்ட் ஃபுஜியில் தனித்துவமான வானிலை நிலவுவதுடன், வானிலை திடீரெனவும் வேகமாகவும் மாறக்கூடும்.

கோடை காலத்தில்கூட மலையில் உடல் வெப்பநிலை ஆபத்தான அளவுக்கு குறையும் ஹைப்போதெர்மியா ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தனது செயலுக்காக பொலிஸாரிடம் தந்தை மன்னிப்பு கோரியதுடன், “நான் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுண்ட் ஃபுஜிக்கு செல்லும் மலையேற்றப் பயணிகள், தங்களுடன் வரும் ஒவ்வொருவரின் உடல் திறன் மற்றும் சகிப்புத்தன்மையை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும், அனைவருக்கும் ஏற்ற வேகத்தில் பயணிக்க வேண்டும் என்றும் உள்ளூர் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment