Sri Lanka News

எரிபொருள் விநியோகம்; ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்? இன்று இறுதித் தீர்மானம்

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக ஒற்றை எண்களைக் கொண்ட தினங்கள் (மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01) வருவதைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் விநியோகத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் மே மாதம் நடுப்பகுதி வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எனினும், எரிபொருளை சிக்கனமாகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மாத்திரம் பயன்படுத்துமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டு முறையின்படி,வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண்ணாக இருப்பின், இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் எரிபொருள் வழங்கப்படும்.வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண்ணாக இருப்பின், ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளில் எரிபொருள் வழங்கப்படும்.

மார்ச் 31ஆம் திகதிக்குப் பின்னரான விநியோகக் கட்டமைப்பு மற்றும் இந்த வரிசை முறைமையில் மாற்றங்கள் அவசியமா என்பது குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்யவும், வரிசைகளைக் குறைக்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button