India NewsSri Lanka News

36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பு வந்தடைந்த இந்திய கப்பல்!

இந்திய அரசின் விசேட ஒத்துழைப்புடன், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய எரிபொருள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் ‘ஹரி ஆனந்த’ என்ற எரிபொருள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது என்று துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பலில் 18 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல், 18 ஆயிரம் மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் என மொத்தம் 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளின் பலனாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு இந்த எரிபொருளை வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் வெவ்வேறு நாடுகளிலிருந்து மேலும் 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதுள்ள டீசல் கையிருப்பு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை போதுமானது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் மாதம் வரை விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதியளவு பெற்றோல் கையிருப்பு இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button