Sri Lanka News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீள் எழுச்சிக்கு புதிய மூலோபாயத் திட்டம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நாட்டின் தேசிய விமான சேவையாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் நிதிச் சுமையாக இருந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இருப்பினும், ஒரு தீவு நாடாக, நமக்கு சொந்தமான தேசிய விமான சேவை அவசியம் என்பதுதான் எமது கொள்கை, என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி நிலையை மேம்படுத்த, முகாமைத்துவத்தினால் மூன்று ஆண்டுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் சுமார் 1 பில்லியன் ரூபாவை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளது.

எதிர்காலத்தில் நிதி மற்றும் செயல்பாட்டு ரீதியான ஒத்துழைப்பை வழங்கக்கூடிய முதலீட்டுப் பங்குதாரர்களை இணைத்துக்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இருப்பினும், விமான சேவையின் தேசிய அடையாளத்தையும், வர்த்தக நாமத்தையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

சில நாடுகளுக்கு நேரடி விமானப் பயணங்களை வழங்கும் ஒரே நிறுவனம் இதுவாகும். சுற்றுலாத் துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நேரடி இணைப்பு மிகவும் அவசியம்.

உலகளாவிய ரீதியில் விமான நிலையங்களில் எமக்குக் கிடைத்துள்ள ‘லேண்டிங் ஸ்லாட்கள்’ ஒரு மூலோபாயச் சொத்தாகும்.இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் தேசிய விமான சேவையின் பலத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

நிறுவனத்தின் செயல்பாடுகள் வலுவடைந்த பின்னரே, சர்வதேச முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சிறந்த பங்குதாரர்களைத் தெரிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் பலன் தராவிடின், அரசாங்கம் தனது அணுகுமுறையை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button