Sri Lanka News

ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் செய்திகளை நிராகரித்தது கடற்படை

இலங்கைக்கு சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பல் விபத்து தொடர்பில் இலங்கை கடற்படை இன்று (04) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“அடிப்படையில் நாம் ஆபத்தில் சிக்கிய கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

அதன் பின்னரே இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பிரதான நோக்கம், மேலும் எவரேனும் பாதுகாப்பாக இருந்தால் அவர்களைக் காப்பாற்றுவதாகும்.

இந்தக் கப்பலில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பதை எதிர்வரும் நாட்களிலேயே கூற முடியும்.” “எமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற போது, ஒரு பெரிய எண்ணெய் படலத்தை மாத்திரமே காண முடிந்தது.

எனவே அந்தக் கப்பல் மூழ்கிவிட்டது எனக் கூற முடியும். எவ்வாறாயினும், இலங்கை கடற்படையினர் இதுவரை கப்பலில் இருந்த 32 பேரை மீட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னரே மேலதிக விபரங்களைக் கூற முடியும்” என கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button