மாலைத்தீவின் அரச தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ‘குரும்பா மாலைதீவுகள்’ விடுதிக்கு வருகை தந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்படி, ஜனாதிபதி மாலைதீவின் துணை சபாநாயகர் அகமது நசீம், வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல், பொருளாதார மேம்பாடு மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத், பாதுகாப்பு அமைச்சர் முகமது கசான் மௌமூன், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் மூசா ஜமீர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசான் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
மாலைத்தீவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதற்காக ஜனாதிபதிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே வலுவான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தப் பயணம், எதிர்காலத்தில் ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புறவுக்கு ஒரு அடிப்படையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடல்களில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் பங்கேற்றுள்ளனர்.




