ரணில் மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க லண்டன் செல்ல அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக 2025 ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரை ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டது.
பின்னர், ரணிலின் மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்டு , தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டு , வழக்கினை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணைகளை இன்று நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




