பல ஆயிரம் கோடி ரூபாய் குவிந்தும் சில லட்சம் மட்டுமே செலவு: ‘பிஎம் கேர்ஸ் நிதி’ பற்றி எழும் கேள்விகள்
2020 ஆம் ஆண்டில் வெறும் 2.25 லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில், 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 8,452 கோடி ரூபாய் குவிந்திருந்தது.
பிஎம் கேர்ஸ் நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் 8,452 கோடி ரூபாய் கையிருப்பில் இருந்தபோதிலும், 2024-25 ஆம் ஆண்டில் இந்த நிதியிலிருந்து வெறும் 87.85 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை, அரசு பிஎம் கேர்ஸ் நிதியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. ஆனால் அந்த எண்ணிக்கைகள் பல பழைய மற்றும் புதிய கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
பேரிடர்கள் மற்றும் அவசரநிலைகளின் போது, மக்களுக்கு உதவுவதற்காக இந்த நிதி 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஆனால் விமர்சகர்களின் கருத்துப்படி, கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் மற்றும் பிற பெரிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டபோதிலும், ஒப்பீட்டளவில் இந்த நிதியிலிருந்து மிகக் குறைந்த தொகையே செலவிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, நிதியின் வருவாயும் மொத்த சேமிப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் செலவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால், பேரிடர் நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த நிதி, அவசியமான நேரங்களில் ஏன் விரிவாக பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதியின் தணிக்கை அறிக்கைப்படி, 2024-25 ஆம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த நன்கொடைகளில் 479.04 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் இருந்து கிடைத்த நன்கொடைகளாகவும், சுமார் 92 லட்சம் ரூபாய் வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடைகளாகவும் இருந்தன.

