
குற்றங்கள் நிறைந்த நாட்டுக்குப் பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையைச் சர்வதேசத்தில் உயர்த்தி வைக்கும் கைவிடமுடியாத பொறுப்பை தாம் செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்கிரியாகம சிறி சமாதி மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இயற்கை வளங்களினால் நிறைந்த தன்னிறைவான நாடாக இருந்த போதிலும் முன்னைய ஆட்சியாளர்களின் திட்டமிடாத செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு அபிவிருத்தி கிட்டாமல் போயுள்ளது. தற்போதைய அரசாங்கம் படிப்படியாக நிலையானதாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது.
தாம் ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்துச் செயலாற்றவில்லை.
அனைத்து மக்களுக்காகவும் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படும் அதேநேரம், சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகக் காணப்படும்.
எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து முற்றாக விடுவிக்கும் பொறுப்பை உறுதியாக நிறைவேற்றி, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் இணைந்த குற்ற வலையமைப்புக்களை உடைப்பதற்கான நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.