மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய எதிர்வு கூறல்

மே அல்லது ஜூன் மாதமளவில் இலங்கைக்கு வழமையான மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத தெரண ‘பிக் ஃபோகஸ்’ (BIG FOCUS) நிகழ்ச்சியில் இன்று (06) கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தென்மேற்கு பருவக்காற்றின் போது தற்போது நிலவுவதை விட மழைவீழ்ச்சி குறைவடைவதை எதிர்பார்க்கலாம்.
அதாவது 30 சதவீதத்திற்கும் மேலாக மழை குறையக்கூடும். எனினும், மே மாதம் என்பது எல்-நினோ (El Niño) நிலையின் ஆரம்பம் மட்டுமே.
மே மற்றும் ஜூன் மாதமாகும் போது வழமையான மழைவீழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஏப்ரல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12:13 மணிக்கு பேருவளை, குருலுபெத்த, ரக்வானை, கொடகவெல, உடவளவை மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கிறது.
இவ்வாறான பின்னணியில், சில மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்த போதிலும், நிலவும் கடும் வறட்சியான காலநிலை தொடரும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கால அட்டவணைக்கு அமைவாக நீர் விநியோகத்தை முன்னெடுக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஹோமாகம மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வலய இலக்கம் 01-க்கு இன்று (06) இரவு 08.00 மணி முதல் நாளை (07) காலை 08.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை நிர்வகிப்பதற்கு ஆதரவாக, மட்டக்களப்பு மாநகர சபையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதாரத் திணைக்களத்தினால் புதிய நீர் விநியோக பவுசர் வண்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.




