நாட்டில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அடுத்த ஆறு மாத காலப் பகுதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வுகளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, குறித்த காலப்பகுதியில் வழமையான மழைவீழ்ச்சியை விட பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தார்.
”சாதாரண ஆண்டொன்றின் 30 சதவீதமான மழைவீழ்ச்சி இந்த இரண்டு மாதங்களில் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது, இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், பலத்த மழை பெய்து குளங்கள் நிரம்பி, சிலவேளைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
ஒக்டோபர், நவம்பர் மாதங்கள் ஆகும்போது இலங்கை முழுவதும் மழை பரவலாகப் பெய்யும். வெள்ளப்பெருக்கு நிச்சயமாக வரும் என்று உறுதியாகக் கூற முடியாது; எனினும், எதற்கும் நாம் முற்பாதுகாப்புடன் தயாராக இருக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளில் எல் நினோ நிலமையின் தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

