தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் பெண்களின் செளபாக்கியம், மாங்கல்ய பலம், குடும்ப நலம், செல்வச் செழிப்பு, கலைகளில் மேன்மை மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி சுமங்கலி பெண்களால் வரலக்ஷ்மி விரதம் வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.
சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜை, மகாலக்ஷ்மி அம்மனுக்கு விசேட அலங்கார அபிஷேக பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை என்பன பக்தியுணர்வுடன் இடம்பெற்றன.ஆலய பிரதம குரு தேசமான்ய சிவஸ்ரீ பிரசாந்த சர்மா தலைமையிலான அர்ச்சகர்கள், வரலக்ஷ்மி விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் நற்பலன்கள் குறித்து பக்தர்களுக்குச் சிறப்பு விளக்கவுரை ஆற்றினர்.
பூஜையின் நிறைவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருநீறு மற்றும் விசேட பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வதிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் திரு. தேவன் – அனுராதா குடும்பத்தினரின் உபயத்தில், விரதமிருந்த சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு, வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விசேட பூஜையில் தலவாக்கலை,ஹட்டன், பூண்டுலோயா, அக்கரப்பத்தனை, மெராயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலையகப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமாட்டி மகாலக்ஷ்மியின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

