இலங்கையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) தீவிர தலையீட்டின் காரணமாக நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாக, அதாவது 10 மில்லியன் அலகுகளால் குறைக்க முடிந்துள்ளதாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு குறித்து கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 2026 ஆகஸ்ட் 14 அன்று உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றாடல் தாக்கத்தை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுடன் அதற்குப் பதிலாகச் சூழல் நட்பு மாற்றுப் பொருட்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, உணவு மற்றும் பானங்களின் தரம், சுகாதாரம் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிகாரசபையின் அதிகாரிகள் எப்போதும் விழிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை போன்ற சிறிய சந்தையில் சந்தைப் போட்டியினால் மட்டுமே பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்த முடியாது என்றும், ‘லங்கா சதொச’ மற்றும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தி நியாயமான விலைக்கட்டுப்பாட்டை நிலைநிறுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

