சொத்து, பொறுப்பு விபரங்கள் இனி ஒன்லைன் முறையில்

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினத்திலிருந்து சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மத்திய மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க: “2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் மத்திய மின்னணு கட்டமைப்பை விபரங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்காகத் திறக்கும் நிகழ்வு, இன்று முற்பகல் 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வு மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மத்திய மின்னணு கட்டமைப்புச் செயற்படத் தொடங்கிய பின்னர், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், தமது விபரங்களை இந்தக் கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்.” என்றார்.




