அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 2 சிறார்கள் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில், நேற்று (ஆகஸ்ட் 28) ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மீது, தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
தேவாலயப் பகுதியில் ஒரு பள்ளியும் அமைந்துள்ளதால், புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தேவாலயம் மாணவர்களால் நிரம்பியிருந்தது. காயமடைந்த 17 பேரில் 14 பேர் சிறார்கள் .
தாக்குதல் நடத்திய 23 வயதான ராபின் வெஸ்ட்மேன், சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார் என்றும், அவருக்கு ‘குறிப்பிடத்தக்க குற்றவியல் பின்னணி’ இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடத்தப்பட்ட ஒரு வன்முறைச் செயல்” என்று காவல்துறைத் தலைவர் பிரையன் ஓ’ஹாரா செய்தியாளர்களிடம் கூறினார்.