மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முன்னாள், இந்நாள் முதல்வர்கள்.!

மன்னார் நகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற போது மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர், தற்போதைய நகர சபையின் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோருக்கிடையில் சபை அமர்வின் போது நாவடக்கம் இன்றி இருவரும் மோதிக்கொண்டனர்.
மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது சபையில் தொடர்ந்தும் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் சபை முதல்வரினால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த அமர்வின் தொடர்ச்சியாக இன்றைய தினம் வியாழக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு சபை முதல்வரினால் மீண்டும் சபை கூட்டப்பட்டது.
இதன்போது அனைத்து உறுப்பினர்களும் பங்குபற்றி இருந்தனர். இதன் போது மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர், தற்போதைய நகர சபையின் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோருக்கிடையில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வாய்த் தர்க்கமாக மாறியது. குறித்த இருவரும் நா அடக்கம் இன்றி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் புதிய செயலாளருக்கு காசோலையில் ஒப்பமிடுதல், மக்களினால் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி, ஒப்பந்த அடிப்படை மற்றும் நிரந்தரமாக கடமையாற்றுகின்ற ஊழியர்களின் சம்பளம் வழங்குதல் ஆகியவற்றுக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் சபையினால் அனுமதி வழங்கப்பட்டு சபை அமர்வு முடிவடைந்தது.