Sri Lanka News
37ஆவது காவல்துறை மா அதிபரை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது

நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது.
இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.
காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகச் சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.