கடும் வெப்பம் மனநலத்தைப் பாதிக்கும்! மனநல மருத்துவர் எச்சரிக்கை

கடும் வெப்பம் காரணமாக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் நிம்மதியற்ற நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜயபண்டார எச்சரித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வெப்பத்தினால் ஏற்படும் நீரிழப்பு, உடலில் உள்ள இரசாயன மற்றும் ஹோர்மோன் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி ஒருவரின் மனநலத்தைப் பாதிக்கின்றது.
மூளையில் உள்ள இரசாயனங்கள் மற்றும் ஹோர்மோன்களின் தாக்கம் காரணமாக ஒருவரது மனநிலை வீழ்ச்சியடையக்கூடும்.
இரவு நேரங்களில் நிலவும் அதிகவெப்பம் தூக்கத்தைச் சீர்குலைப்பதோடு, இது மேலும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றது.
கடும் வெப்பமானது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற நிலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
கடும் வெப்பத்தினால் நாட்பட்ட நோயாளிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வெப்பமான காலநிலையில் மது அருந்துவது மன உறுதியற்ற தன்மையை அதிகரிப்பதுடன், மன அழுத்தத்தையும் உண்டாக்கும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
மன நலத்தைப் பேண தியானம் செய்தல், இசை கேட்டல் மற்றும் சூழலோடு இணைந்த செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகும்.
மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இலகுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




