Sri Lanka News

தடையின்றி உர விநியோகத்தை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம்

உர இறக்குமதியில் நிலவும் தடைகளை கருத்திற்கொண்டு எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்குவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அந்த அமைச்சின் அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தற்போதைய உரக் கையிருப்பு மற்றும் விநியோகப் பொறிமுறை குறித்து இங்கு கவனம் செலுத்திய ஜனாதிபதி, மாவட்ட ரீதியாக விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிக்கும் பணிகளை முறையான முகாமைத்துவத்துடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நெருக்கடி நிலைகளின் போது, சில வர்த்தகர்கள் உரங்களை மறைத்து வைப்பதையும், அதிக விலைக்கு விற்பனை செய்வதையும் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்து கைப்பற்றப்பட்ட உரங்களில் ஒரு தொகை, விவசாயத் திணைக்களத்தினால் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு விவசாயத் திணைக்களத்தினால் உரங்களை பாதுகாப்புக் கையிருப்பில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

யுத்த சூழல் நிலவாத நாடுகளுடன் கலந்துரையாடி, மாற்று வழிமுறைகள் ஊடாக உரங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button