கல்முனை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் மற்றும் தாதியர்களின் சீருடை தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைக்கு, சுகாதார அமைச்சு நிரந்தரத் தீர்வை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (18) காலை பாராளுமன்ற வளாகத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டது. இச்சந்திப்பில் ஆளும் கட்சியின் முஸ்லிம் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த சில நாட்களாகப் பெரும் பேசுபொருளாக இருந்த இந்த உணர்வுபூர்வமான விடயம் குறித்து அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்கள் விரிவாக ஆராயப்பட்டன. வைத்தியசாலை கட்டமைப்பின் அமைதி, ஊழியர்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் பெண் ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் கண்டறிவதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய, உடனடித் தீர்வாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படாத வண்ணம் நிரந்தரத் தீர்வைச் சட்டரீதியாக அமுல்படுத்தப் போவதாகச் சுகாதார அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

