நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையில், அரசகரும மொழி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப். நஹீஜா முஷாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அரச நிர்வாகத்தில் இருமொழி மூலமான சேவைகளை மேம்படுத்துவதையும், பொதுமக்களுக்கு உரிய மொழிகளில் சேவைகளைத் தடையின்றி வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் அம்பாறை மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் மகேஸ்வரன் தீபன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். முஹம்மட் றிஸான் (JP) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது



அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை பெறும் போது மொழி மூலமான தடைகளை நீக்குவது குறித்தும், அலுவலக ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களை அரசகரும மொழிக் கொள்கைக்கிணங்க கையாள்வது குறித்தும் இதன்போது விரிவாக விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எப். பர்ஹான், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கே.எம்.எம். அன்சார், திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி நவரத்தினராசா, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம். சினாஸ், பாட போதனாசிரியர் எம்.எம். பாஸில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்த பயனாளிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டதுடன், மொழி உரிமை தொடர்பான தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

