Sri Lanka News

தேயிலைக்கு மேலதிக உரமானியம் அறிவிப்பு

மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் QR நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொள்வதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, மார்ச் 31 ஆம் திகதி வரை 187,759 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகளுக்கு 21,117.7 மெற்றிக் தொன் மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தற்போது 50 கிலோ கிராம் உர மூடைக்கு 4,000 ரூபாவையும், 25 கிலோ கிராம் உர மூடைக்கு 2,000 ரூபாவையும் நிதி மானியமாக வழங்கி வருகின்றது.

இதுவரை 50 கிலோ கிராம் எடையுள்ள 334,256 மூடைகளும், 25 கிலோ கிராம் எடையுள்ள 176,199 மூடைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024/25 முழு ஆண்டிலும் 84,472 விவசாயிகள் மாத்திரமே மானிய உரத்தைப் பெற்றிருந்தனர்.

ஆனால், புதிய நடைமுறையின் கீழ் ஆறு மாதங்களுக்குள் 187,759 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 122.3 சதவீத வளர்ச்சியாகும். கடந்த காலத்தில் 13,015.50 மெற்றிக் தொன் உரம் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய QR முறையின் கீழ் மார்ச் இறுதிக்குள் 21,117.7 மெற்றிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது 62.2 சதவீத முன்னேற்றமாகும். தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு விசேட உர மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள மானியத்திற்கு மேலதிகமாக, இந்த ஆண்டில் ஒருமுறை மாத்திரம் வழங்குவதற்காக 50 கிலோ கிராம் உர மூடைக்கு 5,000 ரூபா மேலதிக மானியத்தை திறைசேரி ஒதுக்கியுள்ளது.

இந்த புதிய 5,000 ரூபாய் மானியத்தையும் QR முறையின் ஊடாகவே வருட இறுதிக்குள் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோ கிராமாகவும், ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலராகவும் உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button