Sri Lanka News

உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

உலக நுகர்வோர் உரிமை தினம் இன்றாகும் (மார்ச் 15).

“உற்பத்திப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கை” என்பதே இந்த ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமை தினத்தின் கருப்பொருளாகும்.

நுகர்வோரின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்நாளின் பிரதான நோக்கமாகும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி, 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி நுகர்வோர் உரிமைகள் குறித்த கருத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றிய அவர், நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகள் குறித்து முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக கருத்துக்களை வெளியிட்டார்.

பின்னர், 1983 ஆம் ஆண்டு முதல் ‘கன்சியூமர் இன்டர்நேஷனல்’ அமைப்பு இந்நாளை சர்வதேச ரீதியில் கொண்டாடி வருகின்றது.

இலங்கையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதான சட்டம் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டமாகும்.

இச்சட்டத்தின் மூலம் பொருட்களின் தரம், உத்தரவாத சான்றிதழ்கள், விலைப் காட்சிப்படுத்தல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடை செய்தல் போன்ற விடயங்கள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பொருட்கள் அல்லது சேவைகளைப் கொள்வனவு செய்யும் போது நீங்கள் ஏதேனும் பாதிப்புக்குள்ளானால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அதிகாரசபையின் பிரதேச அலுவலகங்களுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button