Home இலங்கைச் செய்திகள்வட்டி வீதத்தை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

வட்டி வீதத்தை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

by Mohamed Siraj
0 comments

கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட எதிர்பாராத வட்டி வீத அதிகரிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் அடுத்த ஆண்டில் இலக்கு வைக்கப்பட்டுள்ள 5 சதவீதத்தை நோக்கி மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்கள் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மே மாதம் மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது வட்டி வீத அதிகரிப்பாக இது அமைந்தது.

banner

பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே மே மாத வட்டி வீத உயர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் தாக்கத்தால் ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப் பெரிய பணவீக்க அதிகரிப்பாக இது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 8 சதவீதம் வரை உயரக்கூடும் என சில பொருளாதார பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட வட்டி வீத அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் பிரதிபலிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை காலம் தேவைப்படும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துளளார்.
அடுத்த ஆண்டின் முதல் பாதியில் பணவீக்கம் மீண்டும் 5 சதவீத இலக்கை நோக்கி குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியை பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதத்தில் நிலையாக வைத்திருக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இதன்படி, அடுத்த கொள்கை வட்டி வீத அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியிடப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment