Sri Lanka News

காலை 8 முதல் மாலை 4 வரை வெளிநடமாட்டத்தை தவிருங்கள் – கண் மருத்துவர் எச்சரிக்கை!

தற்போது அதிகரிக்கும் வெப்பநிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் நடமாட வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக கண் மருத்துவ நிபுணர் மலரவனின் ஊடக சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளித்தார்.

தற்போது அதிகரிக்கும் வெப்பநிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் நடமாட வேண்டாம் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

மேலும் தற்போது அதிக வெப்பத்தினால் நீர் சத்து அதிகம் தேவை என்பதால் சிறியவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை தேவைக்கேற்ப நீரினை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கண்ணீர் அதிகம் இக்காலப்பகுதியில் பயன்படுவதால் செயற்கை கண்ணீரையும் பயன்படுத்த முடியும் எனவும், தொப்பி அணிவது, அங்கீகரிக்கப்பட்ட கண்ணாடிகளை அணிவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

கண்களை கசக்குவது, கைகளை சவுக்கரமிட்டு கழுவி பாதுகாப்பது, கைகளால் தேவையற்ற முறையில் கண்களை தொடுவது உள்ளிட்ட விடயங்களை தவிர்ப்பதன் ஊடாக இவ்வாறான நிலைமைகளிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்ட கண் வைத்திய நிபுணர், கண்கள் அதிகம் பாதிப்பு அடைந்தால் மாத்திரம் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களை நாட முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிற தொற்று நோய்களோ கண் தொடர்பான தேவையற்ற பிரச்சினைகளோ உருவாகவில்லை எனவும் அது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Back to top button